சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் தான் யார் என்று தனுஷ் குறிப்பிடாதது குறித்து நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் தனது சொகுசு காருக்கு தமிழக அரசு விதித்த நுழைவு வரியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், நடிகர் விஜய்க்கு எதிராக கண்டன கருத்துக்களை தெரிவித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய், மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்து அபராதம் செலுத்த இடைக்கால தடை பெற்றார்.
கடந்த வாரம் மிக பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரம் இப்பொழுது தான் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அதற்குள் நடிகர் தனுஷின் வழக்கு விசாரணைக்கு வந்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு ரூ.60.66 லட்சம் நுழைவு வரி விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதமன்றம் 50 சதவிகித வரியை செலுத்தி சொகுசு காரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி அந்த காரை தனுஷ் பதிவு செய்து கொண்டார்.
கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 5) நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அதல் பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக ரூ.50க்கு பெட்ரோல் போடும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள். ஒரு சோப்பு வாங்கும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள் என்று நடிகர் தனுஷூக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும் யார் வழக்கு தொடர்ந்தாலும் தான் யார் ? என்ன தொழில் செய்பவர் என்பதை மனுவில் தெரிவிக்க வேண்டும். தான் ஒரு நடிகர் என்பதை மறைத்தது குறித்து தனுஷ் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி விவரங்களை இன்று பிற்பகல் வணிகவரித்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, இன்று பிற்பகல் 2:15 மணிக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.