பிரமாண்ட இயக்குநர் எனப் பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கர் , நடிகர் கமல் ஹாசனை வைத்து எடுத்த 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமானது. படத்தின் இறுதியில் நாயகன் சேனாதிபதி திரும்ப வருவதைப் போல காட்சியமைத்திருந்தார்கள்.
அதிலிருந்து ஒரு கதையை உருவாக்கி 'இந்தியன் 2' படத்தை எடுக்க ஷங்கர் முன்வந்தார். நடிகர் கமலும் ஒத்துக்கொள்ள லைகா தயாரிப்பில் அதன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது.
ஆனால் சில காரணங்களால் அப்படத்தை மேற்கொண்டு எடுக்காமல் இயக்குநர் தரப்பிலும் கமல் தரப்பிலும் தாமதம் ஆனது. பின் ஷங்கர் அப்படத்தை முடித்துக் கொடுக்காமலே 'அந்நியன்' திரைப்படத்தை ஹிந்தியில் எடுக்க திட்டமிட்டார்.
இதை அறிந்த லைகா நிறுவனம் 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுக்காமல் ஷங்கர் எந்த படத்தையும் எடுக்கக்கூடாது என அவர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பின் வழக்கை விசாரித்த தனி நீதிபதி அதை தள்ளுபடி செய்தார். உடனே லைகா தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் .
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, லைக்கா சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லைக்கா தரப்பில், தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல், மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல், விசாரணைக்கு உட்படுத்த பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.