பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னடத் திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கிய ராஜ்குமாரின் இளையமகனும், முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமாா் (46), அக். 29 அன்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பால் காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் மோடி உள்பட நாடு முழுவதும் உள்ள ஏராளமானோா் இரங்கல் தெரிவித்தார்கள். முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான் மருத்துவமனையில் இருந்தபோது இரண்டு நாள்கள் கழித்துதான் புனித் ராஜ்குமார் இறந்தது தெரிய வந்தது. அதைக் கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். என் கண் முன்னால் வளர்ந்த குழந்தை. திறமையும் அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை. புகழின் உச்சியில் இருக்கும்போது சிறிய வயதில் மறைந்திருக்கிறார். அவர் இறந்தது கன்னட சினிமாவுக்குப் பேரிழப்பு. அவர் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும் என்றார்.