காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சமந்தாவும் நாகசைதன்யாவும் பிரியப் போகிறார்கள் என்று தொடர்ந்து வந்துகொண்டிருந்த செய்திகள் கடைசியாக உண்மையாகிவிட்டன.
இருவருமே அதிகாரப்பூர்வமாக தங்கள் விலகலை அறிவித்துவிட்ட நிலையில் இப்போது இவர்களுடைய பிரிவுக்கு என்னென்ன காரணங்கள் என்று தேடிப் பிடித்துக் கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறது திரைப்பட உலகம்.
சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிவதற்கு உண்மையிலேயே என்னதான் காரணங்கள்?
ஆண்டுகள் கடந்துகொண்டேயிருக்கும் நிலையில் விரைவில் நாக சைதன்யாவின் வாரிசை சமந்தா பெற்றுக் கொடுத்தால் நல்லது என சைதன்யாவின் குடும்பத்தினர் வெகுவாக எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் திரைத்துறையிலிருந்தும்கூட தற்காலிகமாக சமந்தா விலகி, குடும்பத்துடன் மேலும் ஒட்டுதலாக இருக்கவும் வாய்ப்பு ஏற்படும் நம்பினார்களாம். ஆனால், சமந்தாவோ அப்படியெல்லாம் சிந்தித்ததாகவே தெரியவில்லை. அதிக அளவில் படங்கள் வரவர சமந்தாவும் மிக ஆர்வமாக நடிப்பதிலேயே அக்கறை செலுத்திக்கொண்டிருந்தார். இதனால் நாக சைதன்யா குடும்பத்தினர் பெரும் ஏமாற்றத்தில் இருந்தார்களாம்.
திருமணத்துக்குப் பிறகு திரைத் துறையில் தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்திலோ என்னவோ, பல படங்களில் வழக்கத்தைவிடவும் கவர்ச்சிகரமாக நடித்தார் சமந்தா. படுக்கையறைக் காட்சிகளில் எல்லாமும்கூட நடித்தார். ஓடிடி தொடர் ஒன்றில் அவர் நடித்திருந்த விதம் அவருடைய கணவர் குடும்பத்தினருக்கு சிறிதும் பிடிக்கவில்லையாம்.
இதைத் தொடர்ந்து, சமந்தாவின் படத் தேர்வுகளில் ஆலோசனை சொல்ல சைதன்யாவின் குடும்பத்தினர் முயன்றிருக்கின்றனர். ஆனால், இதை சமந்தா கொஞ்சமும் விரும்பவில்லை என்பதுடன் எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்.
எல்லா நடிகைகளுக்கும் வரக்கூடிய இன்னொரு பிரச்சினையும் சமந்தாவுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விருந்து நிகழ்ச்சிகளுக்கு சமந்தா செல்வதையும் ஆடை வடிவமைப்பாளர் ஒருவருடன் சமந்தாவுக்கு இருந்ததாகக் கூறப்படும் நட்பையும் யாரும் விரும்பவில்லை, நாக சைதன்யாவுக்கு முற்றிலுமாகப் பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | ''எனக்கு கதாநாயகியாகும் ஆசையில்லை'': பிக்பாஸில் பவானி உருக்கம்
சமந்தா தரப்பிலும் சில காரணங்கள் இருப்பதாகத் திரைத்துறையில் பரவலாகப் பேசப்படுகிறது.
நடிகரான நாக சைதன்யா தன்னுடன் நடித்த சில நடிகைகளுடன் நெருக்கமாகப் பழகிவந்ததாகவும் இதை சமந்தா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நட்புகளைக் கைவிடுமாறு சமந்தா தெரிவித்த யோசனைகளை நாக சைதன்யா ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இவற்றைத் தாண்டி ஜெமினி கணேசன் - சாவித்திரி இணையர் விஷயத்தில் பேசப்பட்டதைப் போலவே இன்னொன்றையும் சொல்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து சமந்தா நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். சம்பளமும் குறையாமல் தன்னைவிட பேரும் புகழுமாக இருந்ததையும் நாகசைதன்யாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
சமந்தாவுக்குத் தொடர்ந்து படங்கள் வருவதும் அவை வெற்றிகரமாக ஓடுவதும்கூட சைதன்யா குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லையாம்.
தவிர, சமந்தாவும் எந்தக் காரணத்தைக் கொண்டும் தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாததும் நாகார்ஜுனா மனைவி அமலா வைப் போல சமந்தாவும் குடும்பத்துடன் இருந்துவிட வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்ததும்கூட முக்கியமான காரணங்கள் எனக் கூறப்படுகிறது.
இவையெல்லாமும் அரசல் புரசலாகப் பேசப்படுகிற, கூறப்படுகிற காரணங்கள்தான். இவையும் காரணங்களாக இருக்கலாம். இல்லாமல் வேறு காரணங்களும்கூட இருக்கலாம். சமந்தாவும் நாக சைதன்யாவும் சொன்னால் மட்டும்தான் உண்மை என்னவென்று தெரியவரும்!