தனது விவகாரத்து தொடர்பாக அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் பிரிவுக்கு சில செய்தி நிறுவனங்கள் அதிர்ச்சி காரணங்களை வெளியிட்டது. குறிப்பாக சில தெலுங்கு யூடியூப் சேனல்கள் சமந்தாவுக்கு உடை வடிவமைப்பாளர் ப்ரீத்தம் ஜுகல்கருடன் தொடர்பு என வதந்திகள் பரப்பின.
ஆனால் அதனை அவர் மறுத்தார். இருப்பினும், வதந்திகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் தன்னைப் பற்றி தவறான தகவல்கள் பகிர்ந்த சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்குகள் தொடர்ந்துள்ளார். மேலும் ஓய்வு பெற்ற மருத்துவர் வெங்கட ராவ் என்பவர் மீதும் ரசனையற்ற முறையில் கருத்துக்களை தெரிவித்ததற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வழக்குகள் விரைவில் தெலங்கானா மாநிலம் குக்கட்பள்ளி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கின்றன.
இந்த நிலையில் தெலங்கானா இணைய பத்திரிக்கையாளர் சங்க தலைவர் புர்ரா ஸ்ரீநிவாஸ், தங்கள் மீது சமந்தா தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளார். சமந்தா தங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது தவறானது என்றும், அவர் கேட்டுக்கொண்டால் அவரது விடியோக்களை நீக்க நாங்கள் தயார் என்றும் தெரிவித்தார்.