முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த நடிகர் பிருத்வி ராஜின் புகைப்படத்தை எரித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரபல மலையாள நடிகரான பிருத்வி ராஜ் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முல்லை பெரியாறு அணை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், உண்மை மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இந்த 125 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை செயல்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. நம் அரசியலையும், பொருளாதாரத்தையும் தள்ளி வைத்துவிட்டு எது சரியோ அதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் வழக்கறிஞர் ரசூல் ஜோய் என்பவரும், மருத்துவர் ஜோசஃப் என்பவரும் அணை பலவீனமாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் , தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முல்லை பெரியாறு அணை குறித்து தவறான கருத்து தெரிவிப்பதாகக் கூறி நடிகர் பிருத்விராஜ், வழக்கறிஞர் ரசூல் ஜோய், மருத்துவர் ஜோசஃப் ஆகியோரின் உருவப் படத்தை எரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.