இலங்கையில் கடுமையான பொருளாதார சிக்கல் காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதனையடுத்து அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கும் வகையில் புதிய அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தார்.
இந்த பரபரப்பான சூழலில் இலங்கை மக்களுக்கு ஆதரவாக நடிகை லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ''இலங்கை மக்களாகிய நாம் மோசமான போர் காரணமாக நம் குடும்பத்தினர் உட்பட அனைத்தையும் இழந்தோம். சுனாமியை சந்தித்தோம், கடந்த 2019-ல் தேவாலயங்களில் வெடி குண்டு வெடித்ததை எதிர்கொண்டோம். கரோனாவை எதிர்கொண்டுவருகிறோம். தற்போது பொருளாதார சிக்கல்களை சந்தித்தித்துள்ளோம்.
இது அனைத்தும் நமது தவறு அல்ல. நாம் எல்லாவற்றையும் எதிர்கொள்வோம். காரணம் நாம் இலங்கை மக்கள். எந்தவொரு நிலையிலும் எதிர்கொள்வதற்கு தேவையான சக்தி நம்மிடம் இருக்கிறது. இப்பொழுது நாம் ஒன்றிணைவோம், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து இந்த சூழ்நிலையை எதிர்கொள்வோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
லாஸ்லியா இலங்கையில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், கவினுடன் காதல் என மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார். தற்போது கே.எஸ்.ரவிக்குமாரின் 'கூகுள் குட்டப்பன்' படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.