மறக்க முடியாத படமாக கொடுங்கள் என நெல்சனுக்கு பிரபல இயக்குநர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நேற்று(ஆகஸ்ட் 22) துவங்கி நடைபெற்றுவருகிறது. முதலில் சண்டைக்காட்சியுடன் இந்தப் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தெரிகிறது. ஸ்டண்ட் சிவா இந்தப் படத்தின் சண்டைக்காட்சியை வடிவமைத்துள்ளார்.
பேட்ட, தர்பார் படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக ரஜினிகாந்த்துடன் அனிருத் கைகோர்த்துள்ளார். நெல்சன் படங்களில் பாடல்கள் பெரிய வெற்றிபெற்றுவருவதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | ''என்னை மன்னிச்சிடுங்க'' - 'குருதி ஆட்டம்' இயக்குநர் வருத்தம்
சில மாதங்களுக்கு முன் பீஸ்ட் தோல்வியால் ரஜினிகாந்த் - நெல்சன் படம் கைவிடப்படுவதாக தகவல் பரவியது. இதனை மறுக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயிலர் பட அறிவிப்பு புகைப்படத்தை மாற்றினார். இதனையடுத்து ஜெயிலர் படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நெல்சன் இருக்கிறார்.
இந்த நிலையில் அவரது நண்பரும் பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன், வாழ்த்துகள் நெல்சன். உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது. இது உனது சிறந்த படமாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
உனது கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலைக் கொண்டு நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து மறக்க முடியாத படமாக கொடு'' என்று குறிப்பிட்டுள்ளார்.