'சுந்தரபாண்டியன்' படத்தில் ''இந்த ஊர்ல நீங்க எப்படியோ, அந்த ஊர்ல அவரு'' என்று ஒரு வசனம் வரும், நிறைய மீம்களில் கூட இந்தக் காட்சியை பயன்படுத்துவர். இதனைப் போல தமிழகத்தில் நடிகர் அஜித் குமார் எப்படியோ அந்த அளவுக்கு ஆந்திர மற்றும் தெலங்கானா பகுதிகளில் பவன் கல்யாணுக்கு ரசிகர்கள் அதிகம். இருவருக்கும் வெறித்தனமான ரசிகர்கள்.
ரசிகர்களின் அடிப்படையில் திரையுலகினர் பலரும் இருவரையும் சமமாகவே அனுகுவர். இந்த நிலையில் நடிகர் அஜித்தின் 'வலிமை' திரைப்படம் வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதியும், பவன் கல்யாணின் 'பீம்லா நாயக்' வருகிற பிப்ரவரி 25 ஆம் தேதியும் வெளியாகிறது. தற்போது தமிழகத்தில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பப்பி லஹரி மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
ஒரே வாரத்தில் இரு பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவருவதால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் வலிமை திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
பவன் கல்யாண் திரைப்படமும் அதே நாளில் வெளியாவதால் தெலுங்கில் வலிமை படம் போதிய கவனம் பெறாமல் போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பவன் கல்யாணா ? அஜித்தா என்ற கேள்வி தெலுங்கு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.