கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் தனது மகன் துருவ்வுடன் இணைந்து நடித்த 'மகான்' திரைப்படம் கடந்த மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார். விக்ரமின் 61வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
மைதானம்
இந்த நிலையில் இந்தப் படத்துக்கு 'மைதானம்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாம். விளையாட்டு மைதானத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளர் ?
'என்ஜாயி எஞ்சாமி' பாடல் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித்திற்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் பிரச்னை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பா.ரஞ்சித் தற்போது இயக்கியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' படத்துக்கு தென்மா இசையமைத்துள்ளாராம். இதனால் விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் படத்தின் இசையமைப்பாளர் குறித்து ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிக்க | சமந்தாவுக்கு நயன்தாரா அளித்த நினைவு பரிசு: 'டார்லிங் நயன்...'
சிவகார்த்திகேயன் வழக்கு
முன்னதாக 'மிஸ்டர் லோக்கல்' படத்தில் நடித்ததற்காக தனக்கு ரூ.4 கோடி சம்பள பாக்கியைத் தரவில்லை எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடர்ந்தார்.
அதில், தனக்கு மீதமுள்ள சம்பள பணத்தை அளிக்கும்வரை, தயாரிப்பாளர் ஞானேவல் ராஜா, விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்யக் கூடாது என்று கோரிக்கைவிடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று (மார்ச் 31) விசாரணைக்கு வரவிருக்கிறது. இதன் காரணமாக விக்ரம் - பா.ரஞ்சித் படம் துவங்குவதற்கு தாமதமாகும் என்று கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன்
நடிகர் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்துக்காக அவரது தோற்றப் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.