பொங்கலுக்கு வெளியாகவுள்ள அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்களின் திரையரங்க ஒதுக்கீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், யாருக்கு அதிக திரையரங்கம் ஒதுக்கப்படும் என்கிற கேள்விகள் எழுந்தன.
இதையும் படிக்க: 'பொன்னியின் செல்வன் - 2' வெளியீட்டுத் தேதி இதுதானா?
இதுகுறித்து முன்னதாக, துணிவு படத்தினை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனர் உதயநிதி ஸ்டாலின் ‘பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் சரி சமமான திரையரங்குகளில் வெளியாகும்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திரையரங்க ஒதுக்கீட்டிற்காக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் 670க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் துணிவு படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் இது வாரிசு படத்திற்காக ஒதுக்கப்படும் திரைகளை விட கூடுதல் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், துணிவு படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதே நேரம், இணையத்தில் தொடர்ந்து துணிவு திரையரங்க வெளியீடு குறித்து தகவல் வெளியாவதால் விஜய் ரசிகர்கள் ‘எல்லாம் ரெட் ஜெய்ன்ட் வேலை’ என புலம்பி வருகின்றனர்.