விக்ரம் திரைப்பட வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூல் சாதனையைப் படைத்தது. அதனைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியானாலும் இன்னும் சில திரையரங்குகளில் விக்ரம் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துவருகிறது.
இதையும் படிக்க- அதர்வாவின் ‘ட்ரிக்கர்’: டிரைலர் வெளியானது
இந்தப் படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே விக்ரம் திரைப்படம் 100ஆவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. 100ஆவது நாள் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நேற்று புதிய போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் விக்ரம் திரைப்பட வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் 100 வது நாளை எட்டியிருக்கிறது. தலைமுறைகளை தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக்கொள்கிறேன். விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷ்-க்கு எனது அன்பும் வாழ்த்தும்”. இவ்வாறு அவர் நெகிழ்சியுடன் தெரிவித்தார்.