இந்தியாவில் முதல் நாளன்று அதிகமாக வசூலித்த ஹிந்திப் படம் என்கிற சாதனையை கேஜிஎஃப் 2 படைத்துள்ளது.
யாஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார்.
கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். கேஜிஎஃப் 2 படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கேஜிஎஃப் படம் முதல் நாளன்று ரூ. 134.5 கோடி வசூலித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இத்தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இதன் ஹிந்திப் பதிப்பு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு 2019-ல் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கிய வார் படம், முதல் நாளன்று ரூ. 51.60 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது கேஜிஎஃப் 2 ஹிந்திப் பதிப்பு அதன் சாதனையை உடைத்து முதல் நாளன்று ரூ. 53.95 கோடி வசூலித்து புதிய வரலாறு படைத்துள்ளது. கன்னட மொழியில் உருவான ஒரு படம், இந்திய அளவில் முதல் நாளன்று அதிகமாக வசூலித்த ஹிந்திப் படம் என்கிற பெரிய சாதனையை நிகழ்த்தியிருப்பது இந்தியத் திரையுலக வரலாற்றில் மகத்தான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.