விழுப்புரம்: பிரபல நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அவரது நண்பரை விழுப்புரம் காவல் துறையினர் கைது செய்தனர்.
திரைப்படத் தொழிலில் ஏற்பட்ட நட்பின் காரணமாக நடிகை அமலா பாலும், பஞ்சாபை சேர்ந்த பவீந்தர் சிங் தத் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அமலா பாலை திருமணம் செய்து கொள்வதாக பவீந்தர் கூறிய நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் அமலா பால் தரப்பில் அவரது மேலாளர் விக்னேஷ் புகார் ஒன்றை கடந்த 26-ஆம் தேதி அளித்துள்ளார்.
அதில், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே தனக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்த போது பவீந்தர் சிங் உள்ளிட்ட சிலர் பாலியல் தொல்லை அளித்ததாகவும், கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் துன்புறுத்தல் செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க | ''டைல்ஸினால் தாய் மாமனை இழந்துவிட்டேன்'' - எச்சரித்த நடிகர் நட்டி
இதையடுத்து, பவீந்தர் சிங் மீது 16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.