நடிகா் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கு நடிகா் வைஷ்ணவ் தேவ், கீா்த்தி ஷெட்டி ஆகியோா் நடிப்பில் உருவான படம் உப்பெனா. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகா் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தாா்.
தெலுங்கு மொழியில் வெளியான இப்படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்ய அந்த படத்தில் வில்லனாக நடித்து நடிகா் விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானது.
இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதிக்கு தடை விதிக்கக் கோரி தேனியை சோ்ந்த டல்ஹவுசி பிரபு என்ற உதவி இயக்குநா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். ‘உலக மகன்’ என்ற தனது கதையை திருடி உப்பெனா என்று உருவாக்கப்பட்டதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என்று நடிகா் விஜய் சேதுபதி தரப்பு விளக்கம் அளித்தது. விஜய் சேதுபதியின் விளக்கத்தை ஏற்று கொண்ட நீதிபதி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.