மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விக்ரம் நலமுடன் உள்ளதாக அவருடைய மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான மஹான் படம் சமீபத்தில் வெளியானது. விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. பொன்னியின் செல்வன் பட டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது.
நடிகர் விக்ரமுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் கவலையடைந்தார்கள்.
இந்நிலையில் விக்ரமின் மேலாளர் சூர்யநாராயணன், விக்ரமின் உடல்நிலை குறித்த தகவலை அளித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
நடிகர் சியான் விக்ரமுக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். வெளியான தவறான தகவல்களைப் போல அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இந்த நேரத்தில் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்குமான தனியுரிமையை அளிக்கவேண்டும். சியான் நலமாக உள்ளார். ஒரு நாளில் அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்புவார் என்று கூறியுள்ளார். இத்தகவலை காவேரி மருத்துவமனையும் உறுதி செய்துள்ளது.