சினிமா நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் பலத்திற்கு சற்றும் குறைவில்லாத படைபலம் கொண்டவர்கள் சீரியல் நடிகைகள்.
அந்த வகையில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் சின்னத்திரை நடிகை ரச்சிதா மஹாலட்சுமி. பெங்களூரில் பிறந்த இவர் கன்னடத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றியபின் கடந்த 2011 ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலம் தமிழர்களுக்கு அறிமுகமானார்.
பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமானார். அதற்கடுத்து ’நாம் இருவர் நமக்கு இருவர் 2’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கும்போதே திடீரென அதிலிருந்து விலகி கன்னடத்தில் ‘பாரிஜாதா’ மற்றும் தமிழில் ‘உப்புக் கருவாடு’ ஆகிய படங்களில் நடித்தார்.
ஆனால், வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியாததால் மீண்டும் சின்னத்திரைக்கு வந்து ஜீ தமிழில் ‘நாச்சியார்புரம்’ தொடரில் நடித்தார். தற்போது கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ‘இது சொல்ல மறந்த கதை’ தொடரில் நடித்து வருகிறார்.
‘பிரிவோம் சந்திப்போம்’ தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் தினேஷ் மீது ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதில் கடந்த 2015 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக இன்னும் விவாகரத்து பெறவில்லை. இதற்கிடையே ரச்சிதா சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், ரச்சிதா விரைவில் இயக்குநர் ஒருவரை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ரச்சித்தா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றாலும் அவருடைய ரசிகர்கள் யார் அந்த இயக்குநர் எனத் தேட ஆரம்பித்துவிட்டனர்.