விக்ரம் திரைப்படம் குறித்து நெகிழ்ச்சியான எண்ணத்தை நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதிரடியான சண்டைக்காட்சிகளும் சில திருப்புமுனைகளும் நிறைந்த இப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்கிற கதாப்பாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
படத்தைப் பற்றிய விமர்சனங்களிலும் ரசிகர்களின் பார்வையிலும் நடிகர் சூர்யாவின் தோற்றமும் உடல்மொழியும் பெரிய பாராட்டைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் சூர்யா தன் டிவிட்டர் பக்கத்தில் “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா, எப்படி சொல்றது? உங்களுடன் திரையில் நடிக்கும் கனவு நனவானது. இதை செய்துகாட்டிய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. இத்தனை அன்பைப் பார்க்கும்போது திளைப்படைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.