பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து கூடுதல் பாதுகாப்பு வழங்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை பாந்த்ராவில் சல்மான் கான், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சல்மான் கானின் தந்தை சலீம் கான், வழக்கமாக பாந்தரா கடற்கரையில் நடைபயிற்சி செய்வார். இவரின் பாதுகாப்பிற்கு இரண்டு காவலர்கள் உடன் செல்வார்கள்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சலீம் கான் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகு அங்குள்ள ஓர் இருக்கையில் அமரும்போது கடிதம் இருந்துள்ளது. அந்த கடிதத்தில், “பாடகர் சித்து மூஸேவாலா நிலைதான் உங்களுக்கும் ஏற்படும்” எனக் குறிப்பிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மும்பை பாந்தரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சல்மான் கான் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பஞ்சாபில் உள்ள மான்ஸா மாவட்டத்தில் பிரபல பாடகர் சித்து மூஸேவாலா(27) மே 30ஆம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தபோது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சித்து கொலைக்கு காரணமாக உள்ள லாரன்ஸ் பிஸ்னோய், கடந்த 2018ஆம் ஆண்டு சல்மானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்த நிலையில், பாடகர் சித்து கொலைக்கு பிறகு சல்மான் கானுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது உண்மையிலேயே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.