சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரிலிருந்து நடிகர் சஞ்சீவ் விலக உள்ளதாக சின்னத் திரை வட்டாரங்களில் தகவல்கள் பரவுகின்றன.
சஞ்சீவின் மனைவியான ஆல்யா மானசா நடிப்பில் உருவாகிவரும் இனியா என்ற புதிய தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், இந்த தகவல் பரவுவதால், அவர் தனது மனைவியுடன் நடிக்கலாம் எனவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத் திரைக்கு நடிகர் சஞ்சீவ் அறிமுகமானார். அந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அந்த தொடரில் நாயகியாக நடித்த ஆல்யா மானசாவுடன், நடிகர் சஞ்சீவ் காதல் திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் எழில் என்ற முதன்மைப் பாத்திரத்தில் சஞ்சீவ் நடித்து வருகிறார்.
நடிகை சைத்ரா ரெட்டி கயல் என்ற பாத்திரத்தில், நாயகியாக நடிக்கும் இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அப்பாவை இழந்து சொந்தங்களுக்கு முன்பு சுயமரியாதையுடன் வாழ்ந்து காட்ட போராடும் பெண்ணின் கதையே கயல்.
இந்நிலையில், இந்தத் தொடரிலிருந்து நடிகர் சஞ்சீவ் விலகவுள்ளதாக சின்னத்திரை வட்டாரங்களில் தகவல்கள் பரவுகின்றன. கயல் - எழில் இருவருக்குமிடையேயான காட்சிகளுக்கு குடும்பத் தலைவிகள் மட்டுமில்லாமல், பல இளம் தலைமுறையினரும் ரசிகர்களாக உள்ளனர்.
கயல் தொடரின் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர் பக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், சன் தொலைக்காட்சி தொடர்களின் டிஆர்பி பட்டியலிலும் முதன்மை இடத்தில் கயல் தொடர் நீடித்து வருகிறது.
இதற்கிடையே நாயகன் சஞ்சீவ் அந்த தொடரிலிருந்து விலக இருப்பதாக பரவும் தகவலால், கயல் தொடரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, சஞ்சீவின் மனைவி ஆல்யா மானசா நடிக்கும் இனியா என்ற புதிய தொடர் சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. கயல் தொடரிலிருந்து சஞ்சீவ் விலகினால், மனைவி நடிக்கும் இனியா தொடரில் சஞ்சீவ் நடிப்பாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
செம்பருத்தி தொடரிலிருந்து, நாயகன் கார்த்திக் விலகியந்து அந்தத் தொடருக்கும் பெரும் பின்னடைவாகவே சில மாதங்கள் இருந்தன. அதுபோன்ற நிலை கயலுக்கு ஏற்படாமலிருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.