இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் இந்தப் படம் இதுவரை ரூ.400 கோடிக்கும் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்தப் படம் ரூ.500 கோடி வசூலைத் தாண்டும் என்று திரையுலக வட்டாரத்தினர் கணித்துள்ளனர். முதல் பாகத்திலேயே பட்ஜெட்டை விட 40 சதவிகிதம் அதிகம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | ஆஸ்கர் விருது பெற்ற நடிகை மரணம்
பொன்னியின் செல்வன் பட 2 ஆம் பாகம் வருகிற அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பட இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்தப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தளபதி படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறாராம் இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்றுவருகிறது.
லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறதாம். பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகும்போது மணிரத்னம் - ரஜினிகாந்த் இணையும் படம் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.