வந்தியத்தேவன் கார்த்திக்கு அருண்மொழி வர்மன் ஜெயம் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் சர்தார் திரைப்படம் வருகிற 21 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று (14) வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
இதனையடுத்து நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக, செம மச்சி, வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்து நடித்ததற்கு பிறகு சமூக வலைதளங்களில் இருவரும் அடிக்கடி உரையாடிக்கொள்வது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | இளையராஜா பாடலை பாடி அசத்திய மிஷ்கின்! (விடியோ)
சர்தார் படத்துடன் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகிறது. இரண்டு படங்களில் நல்ல விமர்சனங்களைப் பெறும் படங்கள் அதிக வசூலை ஈட்டும் என்பது உறுதி.
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் ஹீரோ படமும், கார்த்தியின் தம்பி படமும் ஒரே நாளில் வெளியாகியிருந்தன. ஆனால் இரண்டு படங்களும் ரசிகர்களைக் கவரத் தவறின.
சிவகார்த்திகேயனுக்கு குடும்ப ரசிகர்களிடம் ஆதரவு இருக்கிறது. அதே போல நடிகர் கார்த்தி எப்பொழுதும் வித்தியாசமான சுவாரசியமான கதைகளின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துவருகிறார். இதனால் யாருடைய படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.