கேரளத்தில் திரைப்பட ப்ரோமோஷனின்போது நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிகோட்டில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் நேற்று ‘சாட்டர்டே நைட்’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக, அப்படத்தில் நடித்த பிரபல நடிகைகளான சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி (கும்பளாங்கி நைட்ஸ் திரைப்படத்தில் பஹத் ஃபாசிலின் மனைவியாக நடித்தவர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, ரசிகர்களின் கூட்டம் அதிகரித்ததால் நடிகைகள் இருவரும் சுற்றிவளைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் சிலர் சானியாவின் உடல் பாகங்களில் கைவைத்து பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சானியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இது மிக மோசமான அனுபவம். எங்கே கை வைத்தார்கள் என்று சொல்லவே அசிங்கமாக இருக்கிறது. இப்போது உங்களுடைய நோய் தீர்ந்துவிட்டதா’? என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், கிரேஸூக்கும் நடந்ததாக சானியா குற்றம் சாட்டியுள்ளதால் பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணையை மேற்கொள்ள காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
பொதுவெளியில் ரசிகர்கள் இப்படி அநாகரீகமாக நடந்துகொண்டது மலையாள திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.