கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில், டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது.
இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இளைஞர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்.
கேரளத்தில் மே 5 ஆம் தேதி வெளியான இப்படம் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலைக் கடந்த முதல் மலையாளப் படம் என்கிற பெருமையைப் பெற்றிருந்தது.
இதையும் படிக்க: ஜெயிலர் டிரைலர் இன்று மாலை வெளியீடு!
மேலும், உலகளவில் இப்படம் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாகவும் கேரளத்தில் மட்டும் ரூ.100 கோடியைக் கடந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃபின் அடுத்த படத்தை தயாரிக்க பல நிறுவனங்கள் முன்வந்தன. போட்டியில், லைகா நிறுவனம் ஜூட் ஆண்டனியின் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நிவின் பாலி ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது, இதில் நாயகனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.