இயக்குநர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் எதிர்நீச்சல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் கனிகா நடிக்கவுள்ளார்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குநர் மிஷ்கின் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் கனிகா பகிர்ந்துள்ளார். சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் கனிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் மூன்று மருமகள்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது.
ஆணாதிக்கம், பிற்போக்குத்தன்மை கொண்ட குடும்பத்தில் மருமகள்களாக வரும் பெண்களை அடக்கி வைப்பதும், மருமகள்கள் அதற்கு எதிராக குரல் எழுப்புவதுமே எதிர்நீச்சல் தொடரின் மையக்கதை.
தமிழ் சின்னத்திரை தொடர்களில் எதிர்நீச்சல் தொடர் மிகவும் பிரபலமானது. அந்தத் தொடரின் கதாபாத்திரங்களே அதற்கு காரணம். ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்து மறைவுக்கு பிறகு எதிர்நீச்சல் தொடர் குறித்த பேச்சுக்களும் சமூக வலைதளங்களில் முன்பை விட அதிகரித்திருந்தது.
மாரிமுத்துவுக்கு பிறகு அந்த பாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை கனிகா நடித்து வருகிறார்.
எதிர்நீச்சல் தொடரில் கனிகாவின் நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் ஏற்கெனவே திரைப்படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் தொடரில் அவருக்கான ரசிகர்கள் அதிகம்.
ஃபைவ் ஸ்டார், வரலாறு, ஆட்டோகிராப் போன்ற படங்கள் கனிகா நடிப்பில் கவனம் பெற்றவை.
தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளார். இயக்குநர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் கனிகா நடிக்கிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக மிஷ்கின் உடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகை கனிகா, ''இயக்குநர் மிஷ்கின் படங்கள் மிகவும் தனித்துவமானவை. அவர் கதை சொல்லும் விதம், அவரின் திரைக்கதை தனித்துவம் மிக்கவை. அவருடைய அடுத்த படத்தில் இணைவதில் மகிழ்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.