‘குரங்கு பொம்மை’ திரைப்பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ திரைப்பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படமானது முழுக்க முழுக்க க்ரைம் மற்றும் த்ரில்லர் களத்தைக் கொண்ட ஆக்ஷன் ட்ராமாவாக உருவாக உள்ளது.
‘குரங்கு பொம்மை’ படத்திற்கும் இசையமைத்த கன்னடத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான பி. அஜ்னீஷ் லோக்நாத் ‘காந்தாரா’ பட வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், தளபதி 67 ஆகிய திரைப்படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றிய ஃபிலோமின் ராஜ் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். ’லவ் டுடே’ மற்றும் ‘விலங்கு’ இணையத்தொடர் ஆகியவற்றில் பணியாற்றிய தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வகுமார் கலை இயக்குநராக இதில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. பெயரிடப்படாத இந்தப் படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.