சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இனியா தொடர் 200 நாள்களை நிறைவு செய்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மாலை நேரத் தொடர்களில் ஒன்று இனியா. இந்தத் தொடர் டிஆர்பி பட்டியலில் முதல் 5 இடங்களில் ஒன்றாக இடம்பிடித்துவிடுகிறது.
ராஜா ராணி தொடரில் நடித்து புகழ் பெற்ற ஆல்யா மானசா இந்தத் தொடரில் நடித்து வருகிறார். இதனால் ஆரம்பம் முதலே இந்தத் தொடருக்கு ரசிகர்கள் அதிகம்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இடையிடையே புரட்சிகர காட்சிகள் வைத்து சமூக வலைதளங்களில் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்த காட்சிகளும் இனியா தொடரில் உண்டு. இதனால் சின்னத்திரை தொடர்களை பார்க்காதவர்களும் இனியா தொடரைப் பற்றி அறியும் சூழல் ஏற்பட்டது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, 'இனியா' தொடரில், பெரியாரின் கருத்துகள் அடங்கிய வசனம் காட்சிகளாக இடம் பெற்றுள்ளது பலரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதில் நடிகை பிரவீனா, பெரியார் படத்துக்கு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி பொம்பளைங்க அடுப்படிய விட்டு வெளிய வரனும்னு சொல்லியிருக்கீங்களாமே, இனிமேலாச்சும் நான் உங்களப் படிக்குறேன். உங்களப் படிச்சிருந்தா என் வாழ்க்கை அடுப்படியிலயே போயிருக்காதோ என்னவோ? என்பது போன்ற கருத்துகள் இடம் பெற்றன. இதனால் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாகவும் இந்தத் தொடர் பலரால் அறியப்பட்டது.
இவ்வாறு தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் மக்களிடம் பேசப்படும் தொடராக இனியா இருந்து வருகிறது. அத்தகைய இனியா தொடர் தற்போது வெற்றிகரமாக 200 எபிஸோடுகளை முடித்துள்ளது.
இதனால், இனியா தொடரின் ரசிகர்கள் சிறப்பு போஸ்டரைப் பகிர்ந்து நடிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.