எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் நடிகை, தேசிய அளவில் ஹிஜாப் அணிந்து நடிக்கும் முதல் முஸ்லிம் நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எதிர்நீச்சல் தொடருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஞாயிறு உள்பட வாரம் முழுவதும் இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம் இந்தத் தொடரை இயக்குகிறார்.
புகுந்த வீட்டிற்கு செல்லும் மருமகள்கள் மூலம் ஆணாதிக்கத்துக்கு எதிராக திரைக்கதை அமைத்து எதிர்நீச்சல் தொடர் எடுக்கப்பட்டுவருவதால், இளம் தலைமுறையினரையும் இல்லத்தரசிகளையும் இந்தத் தொடர் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
எதிர்நீச்சல் தொடரில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் தனித்துவமாக இருப்பதால், ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
அந்தவகையில் தற்போது எதிர்நீச்சல் தொடரில் ஹிஜாப் அணிந்தவாறு பர்ஹானா என்ற கதாபாத்திரம் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
படிக்க | தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள்!
இவரின் உண்மையான பெயர் ஸீபா ஷெரின். இவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். இதனால் ஹிஜாப் அணிந்தவாறே எதிர்நீச்சல் தொடரில் நடித்து வருகிறார்.
எதிர்நீச்சல் தொடரில் புரட்சி கருத்துகளைப் பேசும் ஜீவானந்தம் (இயக்குநர் திருச்செல்வம்) பாத்திரத்தின் உதவியாளராக நடித்துவருகிறார்.
எதிர்நீச்சல் தொடரின் ஆடிஷனின்போது, எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் வைஷ்ணவி, ஸீபா ஷெரினை பரிந்துரைத்துள்ளார். ஆடிஷனில் நன்றாக நடித்ததால், அவரை பர்ஹானா பாத்திரத்தில் நடிக்க இயக்குநர் திருச்செல்வம் ஒப்புக்கொண்டார்.
எனினும், திரையிலும் ஹிஜாப் அணிந்தவாறுதான் நடிப்பேன் என ஸீபா நிபந்தனை விதித்துள்ளார். இதற்கு திருச்செல்வமும் சம்மதம் தெரிவித்து, தற்போது பர்ஹானா பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதன்மூலம் ஹிஜாப் அணிந்தவாறு தேசிய அளவிலான தொலைக்காட்சியில் நடிக்கும் முதல் முஸ்லிம் நடிகை என்ற பெருமையை ஸீபா பெற்றுள்ளார்.
ஸீபா குறித்து கட்டுரைகளும் ஆங்கில ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஸீபாவுக்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
எதிர்நீச்சல் தொடரில் வரும் சிறப்பு வாய்ந்த பாத்திரங்களில் பர்ஹானா பாத்திரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.