ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நீண்ட நாள்களாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது இட்டை ரோஜா.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக பிரைம் டைம் எனப்படும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர்.
எனினும் ஒருசில மதிய நேர தொடர்கள் மக்களைக் கவர்வதுடன், டிஆர்பி பட்டியலிலும் குறிப்பிடத்தகுந்த இடங்களைப் பெறுகின்றன. அந்தவகையில், ஜீ தமிழில் நண்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் இரட்டை ரோஜா தொடருக்கு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது.
2019 ஆகஸ்ட் மாதம் முதல் இரட்டை ரோஜா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஷிவானி நாராயணன் முதன்மை பாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது சாந்தினி தமிழரசன் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அபி - அணு என்ற இரட்டைப் பிறவி சகோதரிகளின் மாறுபட்ட குணங்களை அடிப்படையாக வைத்து இரட்டை ரோஜா தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
அபி - குடும்பத்துக்காக யோசித்து குடும்ப நலனுக்காக தியாகங்களை செய்பவராகவும், அணு - சுயநலத்துடன் தனது விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுப்பவராகவும் உள்ளார். இவர்கள் இருவரின் திருமண வாழ்க்கை அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக விரிகிறது.
இந்தத் தொடரை தற்போது நந்தகுமார் இயக்கி வருகிறார். இதற்கு முன்பு மணிகண்ட குமார், அப்துல்லா ஆகியோர் இயக்கினர். இந்தத் தொடர் தற்போது ஆயிரம் எபிஸோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது நீண்ட நாள்களாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்றாக இரட்டை ரோஜா உள்ளது. எனினும் இந்தத் தொடர் விரைவில் முடிவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி தொடர், 2017ஆம் ஆண்டு அக்டோபர் 16, முதல் 2022 ஜூலை வரை ஒளிபரப்பாகி வந்தது குறிப்பிடத்தக்கது.