உலக அழகி பட்டத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தமிழில் இயக்குநர் மணிரத்னம், இருவர் படத்தின் மூலம் ஐஸ்வர்யாவை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் என பல படங்களில் நடித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்கிற மகளும் உள்ளார்.
இதையும் படிக்க: வெளியானது தங்கலான் டீசர்!
தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் வெறும் அழகை மட்டும் வாய்ப்பாகக் கொள்ளாமல் ஜீன்ஸ், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜோதா அக்பர் உள்ளிட்ட பல படங்களில் நல்ல நடிகையாகவும் தன்னை நிரூபித்தவர்.
பி.சி.ஸ்ரீராமில் இருந்து ரவிவர்மா வரையிலான பல ஒளிப்பதிவாளர்களின் ஜாலங்களில் பேரழகியாகவே இப்போதும் வலம் வரும் ஐஸ்வர்யா ராய்க்கு இன்று 50-வது பிறந்தநாள்.
வயதாக வயதாக தோற்றமும் பொலிவும் மாறுவது இயல்பு. ஆனால், இறுதியாக அவர் நடித்த பொன்னியின் செல்வனில் என் விசயத்தில் அது கிடையாது என்பதைக் காட்டியிருக்கிறார், ‘அதிசயமே அசந்துபோகும் அதிசயம்!.’