இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. பருத்திவீரன் படத்தில் தன் பணத்தை அமீர் பொய்கணக்குக் கூறி திருடிவிட்டதாக ஞானவேல் ராஜா தெரிவித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, அமீருக்கு இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.
இதையும் படிக்க: ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்: கரு.பழனியப்பன்
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா அமீருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்,
"திரு.ஞானவேல் அவர்களே, பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதார பிரச்சனை மட்டுமே, ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அமீர் உங்கள் படத்தில்தான் வேலை கற்றுக்கொண்டார் என்பதை எக்காளமாகக் கூறி வன்மமாக சிரிப்பது என் போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும். ஏனென்றால், உண்மையான படைப்பாளிகள் சாகும்வரை கற்றுக்கொண்டேதான் இருப்பார்கள். மிகச்சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும், அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்னையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.