விஷால் பேசியது ரொம்பத் தவறு: மன்சூர் அலிகான்

சிறிய பட்ஜெட் படங்களை யாரும் எடுக்க வேண்டாம் என விஷால் பேசியது ரொம்பத் தவறான விஷயம் என்று மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் (கோப்புப்படம்)
நடிகர் மன்சூர் அலிகான் (கோப்புப்படம்)

சமீபத்தில் நடிகர் விஷால் ஐந்து கோடி ரூபாய்க்கு குறைவாக பணம் வைத்துக் கொண்டு யாரும் திரைப்படம் எடுக்க வராதீர்கள் என்று பேசியது சர்ச்சையானது.

விஷாலின் கருத்துக்கு நடிகர் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலரும் மறுப்பு தெரிவித்தனர். அந்தவகையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகானும் விஷால் பேசிய கருத்து தவறானது என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். இவர் விஜயகாந்த், மம்முட்டி, விஜய், அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது 'சரக்கு' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மதுமிதா, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய மன்சூர் அலிகான், “சின்னப் படங்களை எடுக்காதீர்கள். அதனால் நஷ்டம்தான் ஏற்படும் என விஷால் பேசியது ரொம்பத் தவறு. அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்துகொண்டு அவர் அப்படி பேசியிருக்கக் கூடாது. ஏதோ அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தில் அப்படி கூறிவிட்டார்.

சித்தா படம் ரூ.3 கோடி செலவில் எடுக்கப்பட்டதுதான். அது நன்றாக ஓடியது. மணிகண்டன் நடித்த குட்நைட் படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதுதான். அதுவும் நன்றாக ஓடியது. அதைப்போல ஒருவர் 50 லட்சம் ரூபாயில் சமூகத்தால் வரவேற்கப்படும் படத்தை எடுக்க முடியும்.

பான் இந்தியா படமாக எடுத்தால்தான் சினிமா பார்க்க வேண்டும் என்பதில்லை. எளிய முறையில் எடுக்கப்படும் சிறிய பட்ஜெட் படங்களும் மக்களிடம் வரவேற்பை பெறும்” என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com