சின்னத்திரையில் பலரின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றான எதிர்நீச்சல், மறுஒளிபரப்பிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
வழக்கமாக இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர், மறுநாள் காலை 11 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. நேற்றைய எபிஸோட்தான் மறுநாள் காலையில் மறுஒளிபரப்பாகும். இந்த மறுஒளிபரப்பிலும் எதிர்நீச்சல் தொடர் நல்ல டிஆர்பி பெற்று வருகிறது.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. திருச்செல்வம் இயக்கும் இந்தத் தொடரில் மதுமிதா நாயகியாக நடிக்கிறார்.
எனினும், இந்தத் தொடரில் வரும் அனைத்து பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமாக நினைவில் நிற்குமளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், எதிர்நீச்சல் தொடரில் பெரும்பாலான பாத்திரங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக குணசேகரன், நந்தினி, ஆதிரை, கரிகாலன், கதிர், ஜீவானந்தம், பர்ஹானா என அனைத்து பாத்திரங்களும் தனித்துவமானவை. பெரும்பாலான பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர் எடுக்கப்படுவதாலும் அந்த பாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் பதியுமளவு அழுத்தமாக இருப்பதாலும் இந்தத் தொடர் மறுஒளிபரப்பிலும் ரசிகர்களைக் கவர்கிறது
எதிர்நீச்சல் தொடர் டிஆர்பி பட்டியலில் (11.45 புள்ளிகள்) முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது. இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் டிஆர்பி பட்டியலில் முதன்மை இடத்தைப் பெறுவது இதுவே முதல்முறை.
இதேபோன்று மறுஒளிபரப்பிலும் டிஆர்பி பட்டியலில் (1.82 புள்ளிகள்) எதிர்நீச்சல் தொடர் முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது. தொலைக்காட்சிகளில் மறுஒளிபரப்பு செய்யப்படும் தொடர்களிலும் முதன்மை இடத்தை எதிர்நீச்சல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.