மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நீதிமன்றத்தை விட விஷால் பெரிய ஆள் இல்லை: நீதிபதி கண்டிப்பு

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரான விஷாலை நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார்.

News image
Updated On :22 செப்டம்பர் 2023, 8:47 am

நடிகா் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியா் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ. 21 கோடியே 29 லட்சம் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிட்டதற்காக விஷால் நிறுவனத்துக்கு எதிராக, லைகா நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.15 கோடியை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமா்வு, தொகையை செலுத்தாவிட்டால், தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீா்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, நடிகா் விஷால் நேரில் ஆஜராகியிருந்தாா். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி, விஷாலின் நான்கு வங்கிக் கணக்குகளில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரைக்குமான கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன என்பதையும் சொத்து ஆவணங்களுடன் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தாா்.

இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராஜ விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. இதற்கான காரணமாக, ‘வங்கியில் இருந்து சொத்து விவரங்களைப் பெற தாமதமாகிவிட்டது. இதனை தாக்கல் செய்ய 6 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.  மேலும், என் வீடு அடமானத்தில் இருக்கிறது’ என விஷால் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, “நீதிமன்றத்தை விட பெரிய ஆள் என விஷால் எண்ண வேண்டாம். நீதிமன்றம் முன் அனைவரும் சமம். இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் லோன் இருப்பதாகக் கூறுகிறீர்கள். உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது?” எனக் கண்டிப்புடன் கூறிய பின், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து விஷால் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கும் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.