தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | இந்த வாரம் திரையரங்குகளில்....6 திரைப்படங்கள்!
அனிருத் இசையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்நிலையில், நேற்று சென்னையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகர் ஷாருக்கான், “ ஜவான் படத்தில் நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவினடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன். அட்லி மிகச்சிறப்பாக படத்தை உருவாக்கியுள்ளார். திரையரங்கம் கண்டிப்பாக அதிரும். மேலும், விஜய் சேதுபதியை மிகவும் நேசிக்கிறேன். படத்தில் ஒரு பாடலை அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என அட்லி சொன்னார். ஆனால், ஒட்டுமொத்த படத்திற்கும் அவரையே இசையமைப்பாளராக பணியாற்ற சொன்னேன். சின்ன வயதில் பெரிய சாதனையை செய்து வருகிறார். என் சொந்த மகனைப்போலவே அனிருத்தைப் பார்க்கிறேன். அவர் என் குழந்தை.” எனக் கூறினார்.