‘யாரடி நீ மோகினி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மித்ரன் கே ஜவஹர். இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் - திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் கதாநாயகிகளாக நடித்தார்கள். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்துக்கு இசை - அனிருத்.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் ஆகஸ்ட் 18 அன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - அனிருத் இணைந்து பணியாற்றியது திருச்சிற்றம்பலம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற திருச்சிற்றம்பலம், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வசூல் வேட்டையில் புதிய உச்சம் தொட்ட பதான்!
தற்போது அடுத்த படம் யாருடன் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதைத் தொடர்ந்து இயக்குநர் மித்ரன் ஜவஹர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சிற்றம்பலம் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, எனது அடுத்தப்படம் திறமையான மற்றும் எனக்கு பிடித்தமான நடிகர் மாதவனுடன். பிரபலமான மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது” தெரிவித்துள்ளார்.
மித்ரன் அவர்களுடன் மின்னலே, தம்பி ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பாளருடன் அடுத்த படத்தில் இணைவது மிக்க மகிழ்ச்சியென நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.