தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மூன்று முன்னணி கதாநாயகர்களின் தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.
ஆயுதப் பூஜை விடுமுறையொட்டி வெளியான நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் பெரும்பாலான திரையரங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும், முதல் வாரத்திலேயே ரூ.461 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் வேறு எந்த படமும் திரையரங்கில் வெளியாகவில்லை.
இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முன்னணி நடிகர்கள் நடித்த ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெய்டு உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் திரைக்கு வரவுள்ளன.
இதையும் படிக்க | தாய்லாந்து சென்ற விஜய் - 68 படக்குழு!
ஜப்பான்
இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜப்பான். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். சித்தார்த், பாபி சிம்ஹா நடித்த ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
ரெய்டு
இயக்குநர் முத்தையா வசனத்தில், கார்த்தியின் திரைக்கதை - இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரெய்டு. நடிகர் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, அனந்திகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மூன்று திரைப்படங்களும் நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.