லியோ திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. முன்னதாக, அந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்த நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சாா்பில் சென்னை பெருநகர காவல்துறையில் கடந்த வாரம் அனுமதியும் பாதுகாப்பும் கோரி மனு அளிக்கப்பட்டது.
இதை ஏற்று லியோ திரைப்பட வெற்றி விழா நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அதற்கு பல நிபந்தனைகளை விதித்துள்ளது.
இதையும் படிக்க: லியோவுக்கான கதையில் யார் வில்லன்?
குறிப்பாக, நிகழ்ச்சியில் 5 ஆயிரம் போ் கலந்து கொள்ளவே அனுமதி அளிக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்துக்குள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துவிட வேண்டும், நேரு உள்விளையாட்டு அரங்கில் வாகன நிறுத்துமிட அளவுக்கு ஏற்றாற்போலவே விழாவில் பங்கேற்க வருவோரின் வாகனங்களுக்குரிய பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனா்.
தற்போது, இந்த விழாவில் கலந்துகொள்ளும் ரசிகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பாஸ் உடன், விஜய் மக்கள் இயக்க அடையாள அட்டையையும் ஆதார் அட்டையையும் கொண்டு சென்றால் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.