கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் கேரளம், தமிழகம் என வசூலில் சக்கைபோடு போட்டது.
உலகளவில் ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய இப்படம், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு ரூ.15 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்.
மேலும், இப்படம் வருகிற மே 3 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.
இதற்கிடையே, மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்களான நடிகர் சௌபின் சாகிர், பாபு சாகிர், ஷான் ஆண்டனி ஆகியோர் மீது சிராஜ் என்பவர் பண மோசடி புகார் அளித்திருந்தார்.
அதில், மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் படத்தின் லாபத்தில் 40% தருவதாகக் கூறி ரூ.7 கோடியை என்னிடமிருந்து பெற்றார்கள். ஆனால், இதுவரை பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாகக் கூறியிருந்தார்.
தற்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து, காவல்துறை அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.