லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்த இப்படம் நேற்று முன்தினம் (பிப்.9) திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று வரும் நிலையில், உலகளவில் லால் சலாம் முதல்நாள் வசூலாக ரூ.8 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “3 திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கொலைவெறி’ பாடல் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அது, படத்திற்கு பலமாக இருக்கும் என நினைத்தால் பலவீனமாக முடிந்துவிட்டது. நல்ல கதையம்சமுள்ள 3 படத்திற்கு அப்பாடல் பெரிய அழுத்தமாக மாறிவிட்டது. சொல்லப் போனால் படத்தையே விழுங்கிவிட்டது. திரையரங்கில் வெளியானபோது கிடைக்காத வரவேற்பு தொலைக்காட்சியிலும் மறுவெளியீட்டிலும்தான் கிடைத்தது. கொலைவெறி பாடலால் அப்படத்திற்கு எந்தப் பயனுமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: எல்ஐசி படப்பிடிப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா!
அனிருத் இசையில் தனுஷ் பாடிய ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாடல் உலகளவில் பிரபலமடைந்தது. இப்பாடல் அந்த நேரத்தில் பெரிய டிரெண்ட் ஆகவும் மாறியிருந்தது. ஆனால், 3 திரைப்படம் வசூலில் தோல்விப்படமாக அமைந்தது.