
நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமெனக் கூறியுள்ளார்.
தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021இல் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டி தொட்டியெங்கும் அதிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வில்லனாக நடிக்கும் ஃபகத் ஃபாசிலுக்கான படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.
புஷ்பா படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புஷ்பா - 2 திரைப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பெர்லின் திரைப்பட விழாவில் புஷ்பா படம் திரையிடப்படவிருக்கிறது. பிப்.15இல் தொடங்கி பிப்.24ஆம் தேதி வரை இந்தத் திரைப்பட விழா நடக்கவிருக்கிறது. அதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் ஜெர்மனி கிளம்பியிருக்கிறார். ஜெர்மனியில் வெளிநாட்டு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது.
ரசிகர்களுக்கான அரங்கில் அதிகாரபூர்வ திரையிடல் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் புஷ்பா படத்திற்கான வணிகத்தை உருவாக இது நல் வாய்ப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்லின் திரையிடலில் கலந்துக் கொண்ட அல்லு அர்ஜுன் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். அதற்கான திட்டம் இருக்கிறது. இதை மிகப்பெரிய யுனிவர்ஸாக மாற்றவிருக்கிறோம்.
புஷ்பா 1இல் பார்த்ததைவிட புஷ்பா 2-இல் பயங்கரமாக இருக்கும். கதாபாத்திரம் ரீதியாக இதில் மிகவும் வலுவான காட்சிகள் இருக்கும்.
பொருட்செலவிலும் கதையம்சத்திலும் முதல் பாகத்தைவிட இது பெரியதாக இருக்கும். புஷ்பா கதாபாத்திரத்தில் புதிய பரிணாமத்தை பார்க்கலாம் எனவும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.