’மன்னிப்பு கேட்கிறேன். ஆனால்..’ சால்வை விவகாரத்திற்கு விளக்கமளித்த சிவகுமார்!

நடிகர் சிவகுமார் பொதுவெளியில் சால்வையைத் தூக்கியெறிந்த சம்பவத்திற்கு விளக்கமளித்துள்ளார்.
’மன்னிப்பு கேட்கிறேன். ஆனால்..’ சால்வை விவகாரத்திற்கு விளக்கமளித்த சிவகுமார்!

ஏவிஎம்மின் காக்கும் கரங்கள் (1965) படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் சிவகுமார். தொடர்ந்து, பல படங்களில் நாயகனாக நடித்தவர், தனிப்பட்ட வாழ்விலும் சில நெறிகளைக் கடைப்பிடித்து வருகிறார்.

குறிப்பாக, தமிழ் ஆர்வம் கொண்டவரான சிவகுமார் கம்பராமாயண உரைகளை நிகழ்த்தி பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

வாழ்க்கையைப் பற்றியும் அன்றாட பழக்க வழக்கங்கள் குறித்தும் பல மேடைகளில் பேசியிருக்கிறார்.

சமீபத்தில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையாவின் புத்தக வெளியீட்டுச் சென்றவர் தன்னைவிட வயதில் குறைவான பழ.கருப்பையாவின் காலில் விழுந்து தன் மரியாதைச் செலுத்தினார்.

பின், தன் உரையை முடித்து கீழே இறங்கியபோது ஒருவர், சிவகுமாருக்கு சால்வையை அணிவிக்க முயன்றார். ஆனால், கோபப்பட்ட சிவகுமார் அதைத் தூக்கியெறிந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இச்செயலுக்காக சிவகுமாரைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

தற்போது, இதுகுறித்து சிவகுமார் விளக்கமளித்துள்ளார். அதில், “நீங்கள் நினைப்பது மாதிரி சால்வையை அணிய வந்தது யாரோ ஒரு ரசிகர் அல்ல. அவர் பெயர் கரீம். என் 50 ஆண்டுகால நண்பர். என் திருமணத்திற்கு வந்து பலரையும் வரவேற்றது கரீம்தான். அதேபோல், கரீமின் திருமணத்தை நடத்தி வைத்தது நான்தான். என் குடும்பத்தில் ஒருவர்போல் இருப்பவர். நான் சால்வைகளை அணிந்துகொள்வதில்லை. யாராவது சால்வையை்ப் போட வந்தால், அதை வாங்கி அவர்களுக்கே அணிவித்து விடுவேன். இது தெரிந்தும் கரீம் சால்வையைக் கொண்டு வந்தது தவறு. அதேநேரம், பொதுவெளியில் நான் சால்வையைத் தூக்கியெறிந்ததும் தவறுதான். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com