காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வடசென்னை வெற்றிக்குப் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.
அவர் நடிப்பில் உருவான ‘டிரைவர் ஜமுனா’, ஃபர்ஹானா, புலிமடா ஆகிய படங்கள் சுமாரான வெற்றியைப் பதிவு செய்தாலும் அவருக்கு பெயரைப் பெற்றுத் தந்தன.
தீராக் காதல் படத்தில் அவரது நடிப்புக்கு மிகவும் நல்ல வரவேற்பினை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பாண்டிச்சேரியில் சுழல் 2 இணையத் தொடரில் நடித்து முடித்துள்ளார். தாம்பரத்தில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் ஊடகவியலாளர்கள் சிலர் நீங்கள் ஏன் பாலா மாதிரி உதவி புரிவதில்லை? விஜய்காந்த் சமாதியை பார்த்தீர்களா? என அடுக்கடுக்காக கேள்வியை கேட்கவும் பொறுமையை இழந்தார்.
இதையும் படிக்க: ரசிகரின் செல்போனை பறித்து விடியோவை நீக்கிய அஜித்குமார்!
பின்னர் அவர், “ஒருவர் உதவி செய்வது நல்ல விஷயம். யாராவது உதவி செய்தால் பாராட்ட வேண்டும். அதை வைத்து இன்னொருவரை கேள்விக் கேட்கக் கூடாது. நானும் சமூகத்திற்கு பல உதவிகள் செய்துள்ளேன். ஆனால் வெளியே சொல்வதில்லை. விளம்பரம் செய்தால் மட்டும்தான் உதவி செய்கிறோம் என்று அர்த்தமா? சுழல் படப்பிடிப்பிக்காக பாண்டிச்சேரியில் இருந்ததால் இங்கு வர முடியவில்லை” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் சென்று மரியாதை செய்தார். பின்னர், “கேப்டனை சந்திக்க ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் வாய்ப்பு அமையவில்லை. அவரது மறைவு வருத்தமாக இருக்கிறது. அவர் செய்த நல்ல விஷயங்கள்தான் அவரைப் பார்க்க இவ்வளவு மக்கள் வந்திருந்தார்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனக் கூறினார்.
தற்போது, தீயவர் குலைகள் நடுங்க, ஹெர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.