நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தின் நயன்தாராவின் 75-வது படமாக உருவானது அன்னபூரணி. இத்திரைப்படத்தில் நடிகர்கள் ஜெய், சத்யராஜ், கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த டிச.29 ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில், இப்படத்தில் பிராமண பெண்ணான அன்னபூரணி (நயன்தாரா) அசைவம் சமைக்க தயங்கும்போது நாயகன் ஃபர்ஹான் (ஜெய்), “வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமரும், லட்சுமணனும் விலங்குகளை வேட்டையாடி சீதாவுடன் சேர்ந்து உண்டனர்.” என வசனத்தில் குறிப்பிடுவார்.
இந்த வசனத்தால் அன்னபூரணி கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, மும்பையைச் சேர்ந்த ஹிந்து அமைப்பின் இணையப் பிரிவினர், இப்படத்தில் ராமர் குறித்து அவதூறாகப் பேசியது மட்டுமல்லாமல் லவ் ஜிகாத்தை ஆதரிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளதாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிக்க: வைரலாகும் விஜய்யின் தோற்றம்!
தொடர்ந்து, இப்படத்தின் மீதும் நடிகை நயன்தாரா மற்றும் ஜெய் மீதும் மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா வருகிற ஜன.22 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்னபூர்ணி திரைப்படம் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனத்தையும் புறக்கணிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.