’நானொரு பஷீரிஸ்ட்..’: கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எழுத்தாளர்கள் பற்றியும் நல்ல புத்தகங்கள் பற்றியும் அடிக்கடி குறிப்பிடுவார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சில ஆண்டுகளாக வாசிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறார்.
இந்நிலையில், மறைந்த பிரபல மலையாள எழுத்தாளரான வைக்கம் முகமது பஷீரின் பிறந்தநாளான இன்று அவரை நினைவு கூறும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில், “ஈடு இணையற்ற கதைகளால் இதயங்களைத் தொட்ட எழுத்துக்கலைஞன், மலையாள இலக்கியப் பிதாமகர், ‘சுல்தான்’வைக்கம் முகமது பஷீர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
நானொரு பஷீரிஸ்ட் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளும் நண்பர்கள் எனக்கு உண்டு. பஷீரின் பல படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது கதைகளை வாசிப்பது உங்களுக்கு நீங்களே அளித்துக்கொள்ளும் ஆகச்சிறந்த பரிசு.” எனக் கூறியுள்ளார்.
வைக்கம் முகமது பஷீர் எழுதியவைகளில் மதிலுகள், பால்யகால சகி, நீல வெளிச்சம், காதல் கடிதம் ஆகியவை புகழ்பெற்றவை.
இதையும் படிக்க: எஸ்கே - 21 டீசர்: வியப்பில் இயக்குநர் நெல்சன்!
மதில்கள் நாவலை இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் திரைப்படமாக உருவாக்கினார். அப்படத்தின் நாயகனாக மம்மூட்டி நடித்திருந்தார். இப்படம் சிறந்த இயக்கநர், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படம் என நான்கு தேசிய விருதுகளையும் ஒரு மாநில விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

