நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் உருவான இந்தியன் - 2 திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
லஞ்சம், ஊழல் சம்பவங்கள் கவனத்திற்கு வந்ததும் அதில் சம்பந்தப்பட்ட மக்கள் அடைந்த வலியை யூடியூப் சேனல் ஒன்றில் பதிவேற்றி வருகிறார் துணை நாயகன் சித்ரா (சித்தார்த்). தன் நண்பர்களான ஜெகன், பிரியா பவானிசங்கர் கதாபாத்திரங்களுடன் நம்மைச் சுற்றி ஏதாவது மாறாதா? என்கிற அக்கறையில் சமூக வலைதளங்களில் விடியோக்களை வெளியிட்டு லஞ்சம் வாங்கிய அதிகாரிகளைக் கைது செய்ய வைக்கிறார்.
ஆனால், கைதாகும் அதிகாரிகள் உடனே சிறையிலிருந்து வெளிவருவதும் மீண்டும் பழையபடி லஞ்சம் வாங்கத் தொடங்குவதுமாக இருக்கிறார்கள். இதைப் பார்த்து மனம்நோகும் சித்ரா, ஊழலைச் செய்பவர்களுக்கு நாம் இப்படி பேசினால் கேட்காது, அவர்களுக்குக் கேட்கிற மொழியில் பேச வேண்டும் என ஆத்திரப்படுகிறார். உடனே, யார் கேட்பார்கள்? என்கிற குரல் வந்ததும் இந்தியன் தாத்தா என்கிறார்.
தொடர்ந்து, இந்தியாவிலிருந்து வெளியேறிய சேனாதிபதி இப்போது எங்கே, எப்படி இருப்பார்? உண்மையில் இருக்கிறாரா எனக் கதை சூடுபிடிக்கிறது. இந்தியன் தாத்தாவை வரவழைக்க சித்ராவும் அவரது நண்பர்களும் முயற்சிக்கின்றனர். இந்தியன் தாத்தா எப்படி இந்தியா வந்தார்? லஞ்சம், ஊழல் செய்யும் அதிகாரிகளை என்ன செய்தார்? என்பதாக விரிகிறது இந்தியன் - 2 கதை.
இந்தியன் முதல் பாகத்தில் பேசப்பட்ட அதே கருவையே இன்றைய ஊழல்களுடன் பொருந்திய கதையாக இயக்குநர் ஷங்கர் உருவாக்கியுள்ளார்.
முதல் இந்தியன் திரைப்படத்துடன் ஒப்பிடும்போது இங்கே திரைக்கதையில் இயக்குநர் ஷங்கர் தடுமாறுவது தெரிகிறது. ஆனால், இன்னும் அவரிடமிருக்கும் பிரம்மாண்டங்கள் தீரவில்லை. காலண்டர், தாத்தா வராரு பாடல்கள், சேனாதிபதியின் சண்டைக் காட்சிகள், ’இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே’ என்கிற சிந்தனைகள் என படத்தைவிட்டு நழுவும்போதெல்லாம் சில காட்சிகள் காப்பாற்றிவிடுகின்றன.
குஜராத் தொழிலதிபர்களைக் கதைக்குள் கொண்டு வந்தது, தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர் என மேலோட்டமான அரசியலைப் பேசியிருக்கிறார். நாட்டில் நடைபெறும் பெரிய ஊழல்களுக்கு எல்லாம் சின்னச் சின்னதாக லஞ்சம் பெறும் அதிகாரிகளே பெரிய காரணமாக இருப்பதை முதல் பாதியில் கவனிக்கும்படி சொல்ல முயன்றிருக்கிறார். அதை இன்றைய இளைஞர்களின் ஊடக ஆயுதமான யூடியூபுடன் இணைத்துக் காட்சிகளாக மாற்றியது ரசிக்க வைக்கிறது.
எத்தனையோ லட்சம் பேர் சிந்திய ரத்தத்தால் கிடைத்த சுதந்திரம் இப்படி லஞ்சம் மற்றும் ஊழல்களால் சீரழிந்து கிடக்கிறதே என வேதனைப்படும் இந்தியன் தாத்தா, இளைஞர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வதுடன் நெருங்கவே முடியாத ஊழல்வாதிகளுக்குத் தன் பாணியில் பதில் சொல்லும் காட்சிகள் கவனத்தைச் சிதறாமல் பார்த்துக் கொள்கின்றன. முக்கியமாக, சித்தார்த் பேசும் சில வசனங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன.
ஆனால், சில காட்சிகளில் பிரம்மாண்ட படங்களுக்கே உரித்தான லாஜிக் இல்லை. குறிப்பாக, வர்மக் கலையால் எதிரிகளைத் தாக்கும் காட்சிகளில் ஐ, அந்நியன் போன்ற திரைப்படங்களின் நினைவு வருவதையும் தவிர்க்க முடியவில்லை. வர்ம அடியால் ஒரு ஆண் கதாபாத்திரம் பெண்ணாக மாறுகிறார். அதில், மூன்றாம் பாலினத்தவரின் நளினங்களே இருக்கின்றன. இக்காட்சி நகைச்சுவையாக மாறுவதால், ஷங்கர் கேலிக்காக ஏன் இவற்றை அணுகுகிறார் எனத் தோன்ற வைக்கிறது. இயக்குநர் ஷங்கர் எழுத்தாளர் சுஜாதாவுக்கு முன், சுஜாதாவுக்குப் பின் என்கிற நிலையிலேயே இருக்கிறார். இப்படத்திற்கு ஷங்கர் உள்பட 4 பேர் திரைக்கதை, வசனம் எழுதியும் அழுத்தமாக இல்லை.
கதை நாயகனான நடிகர் கமல்ஹாசன் சில காட்சிகளில் விசிலடிக்க வைக்கிறார். இத்தனையாண்டு கால நடிப்பால் முதுமையான உடல்மொழியை சில இடங்களில் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் குரலிலிருந்து வரும் வசனங்களும் அதற்கு ஏற்ற தோற்றங்களும் ஏமாற்றத்தை தரவில்லை. ஆனாலும் சில காட்சிகளில் இந்தியன் தாத்தாவின் மேக்கப் தெரிகிறது. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் கமல் சட்டையைக் கழற்றியதும் திரையரங்கம் அதிர்கிறது.
நடிகர்கள் சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, (மறைந்த) நெடுமுடி வேணு உள்ளிட்டோரின் நடிப்பு கதைக்கு ஏற்ப சரியாக இருக்கின்றன. வில்லனான எஸ்.ஜே. சூர்யாவுக்கு அதிக காட்சிகள் இல்லை. ஒருவேளை மூன்றாம் பாகத்தில் இருக்கலாம். மறைந்த நடிகர் விவேக், இன்னும் இருந்திருக்கலாம் என எண்ண வைக்கும் அளவிற்குத் தனக்கெ உண்டான பஞ்ச் நகைச்சுவை வசனங்களைப் பேசி சிரிக்க வைக்கிறார். தமிழ் சினிமாவிற்கு இழப்புதான்.
இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசை, வேகமான திரைக்கதைக்குத் தொந்தரவு செய்யாமல் இருக்கிறது. சில இடங்களில் இந்தியன் முதல் பாகத்தின் பின்னணி இசையைப் பயன்படுத்தியிருப்பதால் பழைய நினைவுகளை மீட்கும்படியாக ரசிகர்களிடம் கைதட்டல்களைப் பெறுகின்றன. ஒளிப்பதிவு, சண்டைப்பயிற்சி, எடிட்டிங் என 3 மணி நேர படத்திற்கு முழுமையான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தின் முடிவில் இந்தியன் தாத்தாவை ஊரே விரட்டி அடிக்கிறது. ஏன்? இந்தியன் - 3 டிரைலரை போட்டார்கள். இளவயது கமல், பிரிட்டிஷ் காலகட்டம் போன்ற காட்சிகளால் விசில் ஓசைகள் கேட்கின்றன. மூன்றாம் பாகத்திற்கான ஆவலை இந்தியன் - 2 உறுதி செய்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.