விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் நடிப்பது எப்போது?: ராஷ்மிகா பதில்!
நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க மிகவும் காத்திருப்பதாக நடிகை ராஷ்மிகா கூறியுள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்தது. பிறகு, கீதா கோவிந்தம், நோட்டா, டியர் காம்ரெட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கும் திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, டியர் காம்ரெட் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர்.
ரசிகர்கள் மத்தியில் இருவருக்குமான ஜோடி பொருத்தம் குறித்து அதிகம் சிலாகிக்கப்பட்டது. இருவரும் காதலித்து வருவதாக அடிக்கடி சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகும். ஆனால், இருவரும் இதுகுறித்து இதுவரை நேரடியாக இல்லை என பதில் சொல்லவில்லை.
ராஷ்மிகா நடிகர்கள் அல்லு அர்ஜூன், கார்த்தி, விஜய், ரன்பீர் கப்பூர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்தியா படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகை ராஷ்மிகா, “சரியான கதைக்காக இருவரும் காத்திருக்கிறோம். அதிக நாள்களாக எங்களது படத்துக்காக ரசிகர்கள் காத்திருப்பது தெரியும். நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். சுவாரசியமான கதை அமைந்தால் நிச்சயமாக இந்தக் கூட்டணி அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவின் பேமலி ஸ்டார் திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.