மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டுள்ளது. நாயகனாக பிருத்விராஜுன் நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர்.
பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வருகிற மார்ச் 28 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
தற்போது, இப்படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, படக்குழுவினர் நேர்காணல்களில் பங்கேற்று கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் பிருத்விராஜ் கலந்துகொண்ட நேர்காணலில், “சினிமா ஒரு போராட்டம். உங்கள் வாழ்க்கையுடன் அதை தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறதா?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, பிருத்விராஜ், “கண்டிப்பாக இல்லை. நான் சுலபமாக சினிமாவுக்கு வந்தவன். என் தந்தை (நடிகர் சுகுமாரன்) பிரபல நடிகர் என்பதாலேயே எனக்கு சினிமாவில் முதல் பட வாய்ப்பு கிடைத்தது. என்னைவிட சிறந்த நடிகர்கள் பலர் இருந்தும் என் அப்பாவால்தான் எனக்கு நாயகனாகும் வாய்ப்பு வந்தது. ஆனால், என் தந்தையால் முதல் பட வாய்ப்புதான் எனக்குக் கிடைத்தது. அதன்பின், என்னை நிரூபிக்க இன்றுவரை கடினமாக உழைத்து வருகிறேன். கண்டிப்பாக, நான் என்ன செய்தாலும் அவருடைய மகன் என்கிற பேச்சை உடைக்க முடியாது. நான் அதிர்ஷ்டசாலியா? ஆமாம், அதிர்ஷ்டசாலிதான். அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்ததா? ஆமாம், அதனால்தான் கிடைத்தது. என்ன செய்ய முடியும்?” என்றார்.
பிருத்விராஜின் இந்த வெளிப்படையான பேச்சைப் கேட்ட ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்