எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை சத்யா தேவராஜன், தனது கணவருடன் திருமணநாளைக் கொண்டாடியுள்ளார்.
எதிர்நீச்சல் தொடரில் கரிகாலன் என்பவருடன் நடைபெறும் கட்டாய திருமணத்துக்குப் பிறகு, கணவர் கரிகாலனை வெறுக்கும் ஆதிரை பாத்திரத்தில் நடிகை சத்யா நடித்து வருகிறார்.
திரையில் ஆதிரையாக கணவரை முற்றிலும் வெறுப்பவராகவும், நிஜ வாழ்க்கையில் சத்யாவாக கணவரைக் கொண்டாடுபவராகவும் அவர் இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்நீச்சல் தொடரில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை, நீலகண்டன், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும் மருமகள்களின் மூலம் பிற்போக்குத்தனங்களை கேள்வி கேட்கும் காட்சிகள் எதிர்நீச்சல் தொடரில் அதிகம் இடம்பெறுகின்றன.
இந்தத் தொடரில் ஜனனி - சக்தி, நந்தினி - கதிர் ஜோடிகளைப் போன்று ஆதிரை - கரிகாலன் ஜோடிக்கும் ரசிகர்கள் அதிகம்.
எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சத்யா தேவராஜன். கரிகாலனாக விமல்குமார் நடித்து வருகிறார்.
ஆதிரை - கரிகாலன் தம்பதிக்கு இடையே நடக்கும் சண்டை, அதற்கு கரிகாலன் மேற்கொள்ளும் சமாதானம், அதில் அவர்களுக்கிடையே வெளிப்படும் காதல் என பல்வேறு காட்சிகளில் இவர்களின் நடிப்பு மக்களைக் கவரத் தவறுவதில்லை.
இவர்களுக்கு இடையேயான காட்சிகள் சிறு விடியோக்களாக சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருவது வாடிக்கை. ஆதிரை - கரிகாலன் தம்பதிக்கு இளம் தலைமுறையைச் சேர்ந்த பலர் ரசிகர்களாக உள்ளனர்.
ஆதிரையை அவரின் குடும்பத்தினர் சேர்ந்து கரிகாலன் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். காதலித்தவனை திருமணம் செய்ய முடியாததால், தன்னை திருமணம் செய்துகொண்ட கரிகாலன் மீது கடும் கோபமடைகிறார் ஆதிரை. அவர்களின் காட்சிகள் அனைத்தும் இவ்வாறே எதிர்நீச்சல் தொடரில் இடம்பெறும்.
இதனிடையே நிஜ வாழ்க்கையில் தனது கணவருடன் மகிழ்ச்சியாக திருமண நாளைக் கொண்டாடியுள்ளார் நடிகை சத்யா (ஆதிரை). கணவருன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பதிவிட்டுள்ள அவர், எந்த சூழ்நிலையிலும் என்னைத் தேர்வு செய்வதற்கு நன்றி. இதே காதல், சண்டை, பயணம், உடற்பயிற்சிக்கூடம், திரையரங்கம் என வாழ்க்கையை உடன் இருந்து பகிர்ந்துகொள்வோம். நான் உன்னை காதலிக்கும் அளவு மிகப்பெரியது. உன் தட்டில் இருக்கும் என் விருப்ப உணவுகளைத் திருடுவதற்காகவே உன்னுடன் பயணிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் சத்யாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.