இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், "இன்று முக்கியமான நாள், வீட்டில் கற்புரம் ஏற்றவில்லையென்றால் நம்மைத் தீவிரவாதிகள் எனச் சொல்லிவிடுவார்கள். இந்தியா மோசமான காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் 5 - 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் இருக்கப்போகிறோம் என்கிற பயம் நமக்கு ஏற்படுகிறது. இந்தச் சூழலில் நம் மனங்களைப் பண்படுத்தவும் பிற்போக்குத்தனத்தையும் மதவாதத்தையும் அழிக்க நம்மிடம் இருக்கும் கலை என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தி வருகிறோம். மக்களைச் சரி செய்வதற்கான சக்தி இதற்கு உள்ளது என நம்புகிறேன்” எனக் கூறினார்.
தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் ராமர் பிரதிஷ்டைக்காக அயோத்தி சென்றது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, பா.இரஞ்சித், “அவர் (ரஜினி) 500 ஆண்டுகால பிரச்னை முடிந்ததாகக் கூறினார். இது சரி, தவறு என்பதைத் தாண்டி அவர் மீது எனக்கு விமர்சனம் இருக்கிறது” என பதிலளித்துள்ளார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான ப்ளூஸ்டார் வருகிற ஜன.25 ஆம் தேதி திரைக்கு வருகிறது.